twitter
rss












நவீன `கஜினி'!

பதின்மூன்று தடவை தொடர் தோல்விக்குப் பின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவரை `நவீன கஜினி' என்று சொல்லலாம்தானே!

மும்பையைச் சேர்ந்த 25 வயது இளைஞரான சோகைப் சல்மானிதான் அந்தக் `கஜினி!'

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ தேர்வில் தோல்வியுறுபவர்கள் ஒருமுறை... இருமுறை... அதிகமாக மூன்று முறை முயற்சி செய்வார்கள்.

பின்னர் விட்டு விடுவார்கள்.

ஆனால் சல்மானி தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்ததும் மீண்டும்... மீண்டும்... மீண்டும் தேர்வு எழுதக்னார்.

தனது 14-வது முயற்சியில் வெற்றக்கரமாகத் தேறியிருக்கிறார்!

மும்பை அஞ்சுமன் இஸ்லாம் உயர்நிலைப் பள்ளி யில் 10-ம் வகுப்பு படித்தார் சல்மானி.

1999-ம்ஆண்டு இவர் முதல் முறையாக எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதினார். அதில் உருது பாடத்தில் மட்டுமே தேறினார்.

அத்துடன் படிப்பை மூட்டை கட்டி வைத்த சல் மானி, சலூன் வைத்திருக்கும் அப்பா அக்கீல் கிராத்புரிக்கு உதவியாக இருக்க ஆரம்பித்தார்.

சற்று இடைவெளிக்குப் பின் 2000-ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் தேர்வு எழுதினார் சல்மானி. மீண்டும் தோல்வி!

மீண்டும் படிப்பில் தீவிரமாக இறங்கினார் சல்மானி. ஓர் இரவு நேர டுட்டோரியலில் சேர்ந்து படித்தார். அதற்குக் கொஞ்சம் பலன் இருந்தது. 2003-ம் ஆண்டு மார்ச் தேர்வில் அறிவியல் பாடத்தில் தேறினார்.

2004-ம் ஆண்டு மீண்டும் உருது, அறிவியல் பாடங்களில் மட்டும்தான் தேர்ச்சி.

ஆனால் அந்தத் தேர்வுக்குப்பின் மனத்தளர்ச்சிக்குப் பதில் ஊக்கம் பெற்றார் சல்மானி. `எப்படியும் எல்லா படங்களிலும் `பாஸ்' செய்தே தீருவது!'

2005-ம் ஆண்டு மார்ச்சில் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி. அதே ஆண்டு அக்டோபரில் எழுதிய எந்தத் தேர்விலும் வெற்றி கிட்டவில்லை.

``2006-ம் ஆண்டு மார்ச்சில் கணக்குப் பாடத்தை `பாஸ்' செய்தேன். அதே ஆண்டு அக்டோபரில் இந்தி, மராத்தியை முடிச்சேன். அதன் பிறகு மீதமிருந்த ஒரே பாடம், சமூக அறிவியல். ஆனா அதுக்கு மேலும் ரெண்டு தடவை பரீட்சை எழுத வேண்டியதாயிடுச்சு... இந்த வருசம் மார்ச்சில என்னால தேர்ச்சி பெற முடியல. ஆனா அக்டோபர்ல ஒருவழியா தேறிட்டேன்...'' என்கிறார் சல்மானி.

இத்தனை `படையெடுப்பு'க்குப் பின் எஸ்.எஸ்.எல்.சி.யில் வெற்றி பெற்றது எப்படி இருந்ததாம்?

``என் வாழ்க்கையிலேயே ரொம்ப மகிழ்ச்சியான நாள், தேர்வு முடிவு வெளியான நாள்தான். எங்கப்பா சொன்னபடி எஸ்.எஸ்.எல்.சி.யில் பாசானதில் சந்தோஷமோ சந்தோஷம்!'' என்று பூரிப்பாய்க் கூறுகிறார் சல்மானி.v












இரு கைகள் மற்றும் ஒரு காலையும் இழந்த மாணவர் ஜனார்த்தனன், தன்னம்பிக்கையோடு
படித்து பேனாவை வாயில் பிடித்து 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வை, நேற்று இயல்பாக எழுதினார். எதிர்காலத்தில் தலைச்சிறந்த கிராபிக் டிசைனராக வருவேன் என்றும் கூறினார்.

சென்னை திருவொற்றியூர் ரெடிமர் மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் ஜனார்த்தனன். இவர் எட்டு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். இரும்புக் கம்பியை வைத்து சுழற்றி விளையாடியபோது உயர்மட்ட மின்கேபிளில் பட்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஜனார்த்தனின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன, ஒரு காலையும் இழந்தார்.

பின்னர், தன்னம்பிக்கையோடு பேனாவை வாயில் பிடித்து எழுதிப் பழகிய ஜனார்த்தனன், கைகள் நன்கு செயல்படும் பிற மாணவர்களைப் போலவே வேகமாக எழுதும் திறனை வளர்த்துக் கொண்டார்.

அரசு மெட்ரிக் பொதுத் தேர்வுகள் நேற்று துவங்கின. இதில், ராயபுரத்தில் உள்ள நார்த் விக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனார்த்தனன், தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினார்.

உடல் திறன் பாதிக்கப்பட்டோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. ஆனால், துறை ரீதியான கடிதம் இல்லை எனக் கூறி தேர்வு நடந்த பள்ளியில் ஜனார்த்தனத்திற்கு கூடுதல் நேரம் தர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து நிருபர்கள் அடுத்தடுத்து கல்வித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சிறுவனின் நிலையை விளக்கினர்.இதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி திருஞானசம்பந்தம் பள்ளிக்கு "விசிட்' அடித்தார்.

மாணவர் ஜனார்த்தனன் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி வழங்கினார். ஆனாலும், ஜனார்த்தனன் இதை அவ்வளவாக விரும்பவில்லை என்பதுதான் "ஹைலைட்'.

தேர்வு நேரம் துவங்கியதும் பேனாவை வாயில் பிடித்து எல்லோரையும் போலவே இயல்பாகவும், உரிய வேகத்திலும் ஜனார்த்தனன் தேர்வு எழுதினார். முன்னதாக, ஜனார்த்தனன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் எட்டு வயதில் இருக்கும்போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும், ஒரு காலும் துண்டிக்கப்பட்டன.

இதனால் எதிர்காலம் என்னாகுமோ என்று பயந்த சமயத்தில்தான் வாயினால் எழுத முயற்சி செய் என டாக்டர் கூறினார். இதை சவாலாக எடுத்துக் கொண்டு எழுதவும், ஓவியம் வரையவும் பழகினேன்.

தற்போது இயல்பாகவே எல்லாரையும் போல் உரிய வேகத்தில் எழுதுகிறேன். ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், எதிர்காலத்தில் கிராபிக் டிசைனராக வருவேன்,' என்றார் தன்னம்பிக்கையுடன்.

இதுவரை, பேனாவை வாயில் பிடித்து ஓவியம் வரைந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் 80க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார்.

2004ம் ஆண்டு சிறந்த படைப்புத்திறனுக்காக குழந்தைகள் விருது மற்றும் பால்ஸ்ரி விருதையும் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார்.

கம்ப்யூட்டர்களை இயக்கவும், கீபோர்டு வாசிக்கவும் ஜனார்த்தனன் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.







அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப் கென்னடி.அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் கான வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள் தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார்.தம்மை பார்க்க வந்திருந்த இளைஞர்கள்,பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார்.ஒருநாள் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, "உன் எதிர்கால லட்சியம் என்ன?" என்றார் கென்னடி."இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்கவேண்டும்.இதுதான் என் இலட்சியம்" என்று அசராமல் பதில் சொன்னான் அந்தச் சிறுவன்.விழிகளை உயர்த்திவிட்டு "நல்லது" என்று வாழ்த்திவிட்டு கென்னடு நகர்ந்தார்.அமெரிக்க ஜனாதிபதி ஆவதுதான் லட்சியம் என்ற அந்தச் சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான்.அவர் வேறுயாருமல்ல...... அவர்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன்.






ஒரு இளைஞன் 21 வயதில் வியாபாரத்தை தொடங்கினான்.தோற்றுப்போனான்.மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டான்.மண்ணைக் கவ்வினான்.தொழிலிலும் தோல்வி. காதலியும் மறைந்தாள்.அவன் அசரவேயில்லை.நரம்புத்தளர்ச்சி அவனை வாட்டி எடுத்தது.போராடி மீண்டும் தேர்தலில் குதித்தான்.தோல்விதான் அவனைத் தழுவியது.முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி.பின்னர் மக்கள் மன்றத் தேர்தலிலும் தோல்வி.47_வது வயதில் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி மேல் தோல்வி.ஆனால் 52_வது வயதில்ஜனாதிபதித் தேர்தலில் குதித்தான்.வெற்றி அவனை முத்தமிட்டது.அதன் பிறகு அவன் புகழ் உலகெங்கும் பரவியது.அவன் தொட்டது துலங்கியது.அவனது பெயரை உலகில் உள்ள எல்லா நாடுகளின் வரலாற்று ஆசிரியர்களும் உச்சரித்தனர்.உலக வரலாற்றிலேயே அவருக்கென்று ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டது.அவர் பெயர்தான் ஆபிரகாம்லிங்கன்.