twitter
rss


"தாயிற்சிறந்தொரு கோயிலுமில்லை

அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை"   
என்பது தமிழர்களின் கொள்கை.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று  அன்னையை முதன்மைப் படுத்தியது இந்தியப் பண்பாடு.

"தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது"
என்றார் முகமது நபி.

அம்மா...  அன்னையே... தாயே... எனும் இந்த ஒற்றைச்  சொல்லின் பொருளும் உணர்ச்சியும் நிகரற்றவையாம். தாயின்  மேன்மையை உணராத அல்லது உணர்த்தாத எவனும் மனிதப்படைப்பே அல்லன்.

இத்தகு சிறப்பு வாய்ந்த தாயை மேன்மைப்படுத்த ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை "அன்னையர் தினம்" கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு சில நாடுகள் இந்நாளுக்கு  முன்போ அல்லது பின்போ அன்னையர் தினத்தைக் கடைபிடிக்கின்றனர்..

இன்று அன்னையர் தினம் உலகமெங்கும் கடைபிடிக்கப்படக்  காரணமாக இருந்தவை ஒரு மகள் தன் அன்னைமேல் கொண்டிருந்த பற்றும் அன்னைமேல் வைத்திருந்த மதிப்பும்தாம்!

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜார்விஸ் என்ற பெண்  சமூக சேவைகள் செய்து வந்தார். அக்காலத்தில் நடந்த போரில் பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் கவனிப்பாரின்றிச் சிதறிப்போயின. பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களின் நல்வாழ்க்கைக்கும் அமைதிக்கும் தம்  இறுதி மூச்சு வரை பாடுபட்ட் ஜார்விஸ் 1904  ஆம் ஆண்டில் இறந்தார். இவரது  மகள் அனாஜார்விஸ் முதன்முதலாகத் தம் அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

தம் அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். அனாஜார்விஸ் 1913-ம் ஆண்டில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஃபிலடெல்பியாவில் குடியேறினார். தம் தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையைத்  தொடர்ந்தார்.

தம் தாயாரின் நினைவாகத் தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்ற தம்  எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்.

அரசும் அவர் கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. மாநில அரசு அங்கீகரித்தாலும் அனாஜார்விஸ் திருப்தி அடையவில்லை. அரசியல்வாதிகளுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதே வேண்டுகோளை விடுத்தார். இவரின் வேண்டுகோளையும் அதன் சிறப்பையும் ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், 1914-அம் ஆண்டு வருடந்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அதிகாரப்பூர்வமான அன்னையர் தினமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அமெரிக்கக் காங்கிரஸும் ஏற்றுக்கொண்டது. பின்னர் கனடா அரசாங்கமும் அங்கீகரித்தது. மற்றும் 46 நாடுகள் இதே நாளில் அன்னையர் தினம் என அறிவித்து நடை முறைப்படுத்தின.. தம் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து அனாஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாலும் முழு நிறைவு அடையவில்லை. 46 நாடுகளில் மட்டுமல்லாமல், உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார்.

இன்று கடைபிடிக்கப்படும் அன்னையர் தினம் அன்னைகளுக்கு எல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே துவக்கப்பட்டது. ஆனால் அனா ஜார்விஸ் மணவாழ்க்கையில் ஈடுபட்டவரல்லர்; குழந்தைகளைப் பெற்றவருமல்லர். தாம் அன்னையாகாவிட்டாலும் உலகில் வாழும்  அன்னையர்களுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை. அன்னையர் தினத்தில் நம்மைப் பெற்ற தாயை மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்துத் தாய்மார்களையும் மதித்து, மகிழ்வித்து கவுரவிக்க வேன்டும். இந்த ஒரு நாளில் மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் அன்னையரை மதித்து ஒழுக வேன்டும் என்பதே இந்த அன்னையர் தினச்சிந்தனையாகும்.


நன்றி பொன்மலர்.




உலகில் 7,000 மேற்பட்ட‌ மொழிகள் பேசப்படுகின்றன.இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.இவற்றில்
10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன.
22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன.
35% மொழிகள் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றன ஆனால் அவற்றின் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது.
21% மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது.
13% மொழிகள் அழியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன, இதனை பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் இம்மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.இந்த 7000 உலக வாழும் மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2041, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிஃபிக் நாடுகளில்1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. வாழும் மொழிகள் அதிக எண்ணிக்கையில் ஆசியாவிலும், எண்ணிக்கையில் குறைவாக ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன.
 உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.
உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.
உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.





1.ரபிளீசியா ஆர்னொல்டா மலர் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ளது.

2.ரபிளீசியா ஆர்னொல்டா மலர் ஒன்றின் எடை 7 கிலோ, குறுக்களவு மூன்று அடி. மகரந்தத் தண்டுகளையும் தேன் பையையும் தாங்கும் மையப் பகுதியின் குறுக்களவு 30 செ.மீ. இந்தப் பூவின் இதழ் 60 மில்லி மீற்றர் தடிமன் கொண்டது.

3.பூவின் நடுவே உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீற்றர் நீரை ஊற்றி வைத்திருக்க முடியும். இந்த மலர் விரிந்து இரு நாட்களில் கருகி விடும். இது ஒட்டுண்ணி ரகத்தைச் சேர்ந்ததால் அதற்கென்று தனியாக இலை, தண்டு கிடையாது. பிற தாவரங்களில் ஒட்டிக் கொண்டு வளர்கிறது. நீரையும் பிற சத்துக்களையும் ஒட்டியிருக்கும் தாவரத்தில் இருந்து பெற்றுக் கொள்கிறது.

4.இதைக் கண்டுபிடித்த இரு ஆங்கிலேயர்களின் பெயரால் இந்த மலர் ரபிளீசியா ஆர்னொல்டா (Rafflesia Arnolda) என்று அழைக்கப்படுகிறது.இம்மலரை தமிழில் பிணவல்லி என்று கூறுவர்.இந்த மலரில் படுமோசமான துர்நாற்றம் வீசுகிறது.இம்மலர் தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் மற்றும் சில நாடுகளில் காணப்படுகிறது.